நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறித்த இருவர் கைது…..
திருச்சி மாவட்டம், மணப்பாறை தெற்கு லெட்சுமிபுரத்தைச் சேர்ந்த வினோத் என்பவரது மனைவி கோமளாதேவி (வயது 28). இவர் கடந்த 17 ம் தேதி மாலை விராலிமலை சாலையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வரும் தனது 4 வயது மகனை அழைத்துக்கொண்டு பள்ளியிலிருந்து வீட்டிற்கு நடந்து சென்றபோது மாரியம்மன் கோவில் திருமண மண்டபம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் திடீரென கோமளாதேவியின் கழுத்தில் கிடந்த 5 சவரன் தாலி செயினை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பமுயன்றனர். அப்போது அவ்வழியாக வந்த செல்லையா என்ற ஆட்டோ டிரைவர் ஆட்டோவில் மறிக்க முயன்ற போது கொள்ளையர்கள் ஆட்டோவில் மோதி கீழே விழுந்தனர். இதில் ஒரு கொள்ளையன் தப்பியோடிய நிலையில் மற்றொருவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
இச்சம்பவத்தில் ஆட்டோவை குறுக்கே நிறுத்தி கொள்ளையர்களை மடக்கிப்பிடிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் ஆட்டோவை குறுக்கே நிறுத்தி கொள்ளையனை பிடிக்க காரணமாக இருந்த ஆட்டோ ஓட்டுனர் செல்லையாவிற்கு போலீசார் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்தது.
இந்நிலையில் பொதுமக்கள் பிடித்துக் கொடுத்த நாகை மாவட்டம், காடம்பாடி சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த விஜய் சவுகார் (வயது 28) ஆட்டோவில மோதி கீழே விழுந்ததால் காயமடைந்து மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்ததார். இதனையடுத்து விஜய் சவுகார் மற்றும் பொதுமக்களிடமிருந்து தப்பியோடி தலைமறைவாக இருந்த திருச்சி மஞ்சாங்கோப்பு பகுதியைச் சேர்ந்த நவீன் (வயது 28) ஆகிய இருவரையும் மணப்பாறை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இருவரையும் அடுத்தமாதம் 4 ம்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.