உத்தமர்கோயிலில் அருள்மிகு சௌந்தர்ய பார்வதி உடனுறை பிச்சாண்டேஸ்வரர் வைகாசி திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார்கோவில் ஊராட்சியில் உள்ள அருள்மிகு உத்தமர் கோவிலில் அருள்மிகு சௌந்தர்ய பார்வதி உடனுறை பிச்சாண்டேஸ்வரர் வைகாசி திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்றதும் 108 திருப்பதிகளில் ஒன்றானதும், திருக்கரம்பனூர் ஆதிமாபுரம் பிச்சாண்டார்கோயில் எனப் பிரசித்தி பெற்றதும், மும்மூர்த்திகள் முப்பெரும் தேவிகளுடன் எழுந்தருளிய திருத்தலம் இந்தியாவிலேயே அருள்மிகு உத்தமர் கோவில் ஒன்றேயாகும். ஈஸ்வரனின் 64 திருவிளையாடல்களில் 29ஆவது திருவிளையாடல் அருள்மிகு பிச்சாண் டவருக்கு ஆதியில் சத்கீர்த்திவர்த்தனன் என்கின்ற சோழ அரசனால் ஏற்படுத்தப்பட்ட பெருந்திருவிழாவே வைகாசி தேர் திருவிழாவாகும்.
இந்த வைகாசி தேர் திருவிழாவை முன்னிட்டு கடந்த 3 ந்தேதி கொடியேற்ற்துடன் தொடங்கியது.இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இரவில் சுவாமி பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடைப்பெற்றது.
இந்நிலையில் வைகாசி தேரோட்ட விழாவின் முக்கிய நிகழ்வான தேர் வடம் பிடித்தல் நிகழ்வு இன்று நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தேரோடும் வீதிகளில் வீதி உலா வந்து தேர் நிலையை அடைந்தது. இதில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் கோயில் பணியாளர்கள் கோயில் குருக்கள்கள் செய்திருந்தனர்.