அனுமதியின்றி சரளை மணல் எடுத்த வாகனங்கள் பறிமுதல்
திருச்சி, டிச.29 திருச்சி எஸ்பி தனிப்படை போலீசார் திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூர் பகுதியில் சரளை மணல் எடுத்த டாரஸ் லாரி மற்றும் ஜேசிபி இயந்திரத்தை பறிமுதல் செய்ததோடு இரண்டு வாகனங்களின் ஓட்டுநர்களையும் கைது செய்து நவல்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்
திருச்சி எஸ்பி செல்வ நாகரத்தினம் தனிப்படைப் போலீசாருக்கு அரசு அனுமதி இல்லாமல் திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூர் சின்ன சூரியூர் இடையே உள்ள குளத்து பகுதியில் சரளை மணல் எடுக்கப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் அந்த பகுதியில் எஸ்பி தனி படை போலீசார் அதிரடியாக சோதனை செய்த பொழுது ஜேசிபி இயந்திரம் மூலம் டாரஸ் லாரியில் சரளை மணல் ஏற்றிக் கொண்டிருந்த பொழுது கையும் களவுமாக பிடித்தனர்.
பிடிக்கப்பட்ட டாரஸ் லாரி மற்றும் ஜேசிபி இயந்திரத்தை பறிமுதல் செய்ததோடு லாரி டிரைவரான திருவளர்சோலையை சேர்ந்த அரவிந்தன் (29)ஜேசிபி டிரைவர் குண்டூர் பர்மா காலனியை சேர்ந்த அரசகுமார் (45) ஆகிய இருவரையும் கைது செய்து நவல்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இந்த இடத்தில் எடுக்கப்படும் சரளை மணல் அல்லுவதற்கு உரிய அனுமதியை திருச்சி மாவட்ட கனிமவளத்துறை வழங்கி உள்ளதா இல்லையா என்பது குறித்து சம்பந்தப்பட்ட கனிம வளத்துறை அதிகாரிகளிடம் கேட்டு உறுதி செய்த பிறகு அவர்கள் எடுத்த மண் அனுமதி பெற்ற இடத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளதா? அல்லது சட்டவிரோதமாக எடுக்கப்பட்டுள்ளதா? என்பது தெரியவரும் என்று நவல்பட்டு போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த பகுதியில் பல்வேறு அரசியல் கட்சியினர் ஒன்றாக கூட்டு சேர்ந்து சரளை மணல் மற்றும் கிராவல் மண் கடத்துவது தொடர் கதையாக உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் கண்டு கொள்வதில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்