நடைப்பயிற்சி சென்ற பெண் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
திருச்சி, ஜன.17 திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டியைச் சேர்ந்தவர் மனோகரன் மனைவி கலைவாணி (54). கடந்த 15ம் தேதி புதன்கிழமை அதிகாலை நடைப்பயிற்சிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனை அடுத்து உறவினர்கள் பல இடங்களில் தேடி வந்த நிலையில் நேற்று காலை அவரது வீட்டில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள தனியாருக்குச் சொந்தமான கிணற்றில் சடலமாக மிதந்துள்ளார்.
இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த வையம்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயணைப்பு துறையினர் உதவியுடன் கலைவாணியை சடலமாக மீட்டனர். மீட்கப்பட்ட கலைவாணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இச்சம்பவம் குறித்து வையம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.