மணல் குவாரிகளை திறக்க கோரி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் மனு
மணல் குவாரிகளை திறக்க வேண்டும் எனக்கூறி திருச்சி மாவட்ட பொதுப்பணித்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பாக மனு அளிக்கப்பட்டது.தமிழ்நாடு முழுவதும் முற்றிலும் முடங்கிப் போய் உள்ள தனியார் மற்றும் அரசு கட்டுமான பணிகள் தங்கு தடையின்றி தொடர்ந்து நடைபெறவும், பயனாளர்களுக்கு குறைந்த விலையில் மணல் கிடைத்திடவும், தமிழகம் முழுவதும் ஆறுகளில் இருந்து அனுமதியின்றி மணல் திருட்டு நடைபெறுவது என்றும், மேலும் கேரளா மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு மணல் விற்று வருகிறார்கள் என்று கூறியும் இதனால் தமிழக அரசுக்கு தினசரி கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது என்று கூறியும்,
தமிழகத்தில் மணல் தட்டுப்பாட்டை போக்க திருச்சி, கரூர், நாமக்கல் மாவட்டங்களில் காவிரி ஆறுகளிலும், தஞ்சாவூர், நாகை மாவட்டங்களில் கொள்ளிடம் ஆறுகளிலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் வெள்ளாற்றிலும், கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றிலும், காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களில் பாலாற்றிலும், மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் வைகை ஆற்றில் அதிக அளவில் மணல் திட்டுகள் உள்ள இடங்களை கண்டறிந்து அனுமதி பெற்று மணல் குவாரிகளை திறக்க வேண்டும் என கூறி திருச்சி மாவட்ட பொதுப்பணித்துறை செயலாளரிடம் இன்று தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சம்மேளனம் சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.