படுகாயம் அடைந்த வாலிபருக்கு ரூ.1.22 லட்சம் இழப்பீடு வழங்க கோர்ட்டு உத்தரவு
சென்னை தி.நகர் ராஜாஸ் தெருவை சேர்ந்தவர் பால்ராஜ்(32). இவர் சம்பவத்தன்று (20-5-2013) அதிகாலை தஞ்சாவூரில் இருந்து திருச்சிக்கு அரசு பஸ்சில் குடும்பத்துடன் வந்துகொண்டிருந்தார். திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே அசூர் பிரிவு ரோடு அருகே வந்த போது, சாலையோரம் நின்று கொண்டிருந்த மற்றொரு அரசு பஸ்சின் பின்னால் பால்ராஜ் பயணம் செய்த அரசு பஸ் மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார். இந்த விபத்தால் பால்ராஜ் 5 சதவீதம் ஊனம் அடைந்தார். இதனால் இழப்பீடு கேட்டு திருச்சி சிறப்பு சப்-கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரணை செய்த சிறப்பு சார்பு நீதிபதி எஸ்.தங்கமணி, விபத்தால் பாதிக்கப்பட்ட பால்ராஜுக்கு ரூ.1 லட்சத்து 22 ஆயிரத்து 635 இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கிளை நிர்வாக இயக்குனருக்கு உத்தரவிட்டார்.