128 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்ட கடைக்கு சீல்
திருச்சி நந்தி கோவில் பகுதியில் இயங்கி வந்த ஒரு புக் ஸ்டால் மற்றும் ஜெனரல் ஸ்டோர் கடையில் கடந்த ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு நடத்தினர். அப்போது, கடை மற்றும் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 128 கிலோ பான்மசாலா மற்றும் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் சட்டப்பூர்வ உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டன.
மேலும் அந்த கடையில் தொடர்ந்து பான்மசாலா மற்றும் குட்கா விற்பனை செய்வது கடந்த 10-ந் தேதி ஆய்வில் கண்டறியப்பட்டு, கடை உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன் சென்னை உணவு பாதுகாப்பு ஆணையர் செந்தில்குமார் உத்தரவின்பேரில் தடை ஆணை அறிவிப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று மாலை திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமையிலான அலுவலர்கள் கொண்ட குழுவினர் அக்கடைக்கு சென்று, ஏற்கனவே தடை ஆணை வழங்கப்பட்டதன் அடிப்படையில், அந்த கடையை பூட்டி சீல் வைத்தனர்.