திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பிக்சாண்டார்கோவிலில் ஊராட்சி கொள்ளிடக்கரையில் மியாவாக்கி திட்டத்தில் அடர்வனக் குறுங்காடுகளில் 1.75 லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமை தாங்கினார்.
காற்று மாசுபாட்டை குறைத்து, சுத்தமான காற்றை சுவாசிக்கவும், காட்டில் நடைப்பயிற்சி மேற்கொள்ளவும் கொள்ளிடக்கரையில் அமைந்துள்ள உத்தமர் கோவிலுக்கு சொந்தமான 13 ஏக்கர் நிலப்பரப்பில் மியாவாக்கி அடர்வான காடுகளில் திட்டத்தில் 1.75 மரக்கன்றுகள் நடும் விழாவை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். பிச்சாண்டார்கோவில் ஊராட்சி மன்ற தலைவர் சோபனாதங்கமண ஏற்பாட்டில் மியாவாக்கி அடர்வனக் குறுங்காடுகள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களை கொண்டு பராமரிப்பு செய்யப்படுகிறது.
இதேபோல் பிச்சாண்டவர்கோவில் ஊராட்சியில் அய்யன் வாய்க்கால் கரையில், அடர்வனக் காடுகள் உருவாக்கம் முறையில் 31 ஏக்கரில் 4 லட்சம் மரக்கன்றுகளை நடும் பணிகளை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் தேதி வரும் 13ம் தேதி மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்கும்.
மாநகராட்சி, நகராட்சி விரிவாக்கத்தில் சேர விரும்பும் கிராம ஊராட்சிகள் சேர்த்துக்கொள்ளப்படும். மாநகராட்சியை ஒட்டிய பகுதிகளுக்கு பாதாள சாக்கடை, குடிநீர் திட்டங்கள் கிடைக்கும் வகையில் மாநகராட்சியோடு இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர். விரும்பாதவர்களைக் கட்டாயப்படுத்தவில்லை.
விரிவாக்கத்தில் இணைக்கப்பட்டாலும், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக் காலம் முழுவதும் இருப்பார்கள் என கூறினார்.
இந்த விழாவில் மாவட்ட கலெக்டர் சிவராசு, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்எல்ஏ, சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், கதிரவன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன், ஊராட்சி குழு தலைவர் தர்மன் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.