“7.5 சதவீத இடஒதுக்கீடு ஒரு மிகப்பெரிய புரட்சி” அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!
7.5 சதவீத சிறப்பு உள் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பொறியியல் படிப்பிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை வழங்கும் நிகழ்ச்சி இன்று அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. முதல்வர் மு.க ஸ்டாலின் மாணவர்களுக்கு சேர்க்கை ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தலைமை செயலாளர் இறையன்பு ,உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில்… “தந்தை பெரியாரின் பிறந்த நாளை சமூகநீதி நாளாக அறிவித்தது மட்டுமல்லாமல் அந்த வழியில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்ற முதலமைச்சர் 7.5% என்ற சமூக நீதியை வழங்கி அதற்கான சேர்க்கை ஆணையை வழங்க உள்ளார். வரலாறு கூறுகின்ற ஆணையாக இது இருக்கும். 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை உடனடியாக அறிவித்தார். அந்த வகையில் இதை ஒரு மாடல் நீதிக் கட்சியாக பார்க்க வேண்டியதாக இருக்கிறது.
150 நாட்களில் எல்லாவற்றையும் படிப்படியாக செய்து வருகிறோம். குறிப்பாக கல்வித் துறையின் சரியான முடிவை, சரியான நேரத்தில் எடுத்து உள்ளார். இந்த வருடத்தில் மட்டும் 9000 இருந்து 10 ஆயிரம் வரையிலான மாணவர்கள் இதனால் பயன் பெறுகிறார்கள் என்பதே நமக்குப் பெருமைதான். கிராமப்புற மாணவர்கள் அண்ணா பல்கலைக் கழகத்திற்குள் நுழைய முடியுமா என்று எண்ணிய காலமும் உண்டு”. என்றார்