மகனை தாக்கிய பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க தாய் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார்!
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஸ்ரீரங்கம் அருகே உள்ள பஞ்சகரையைச் சேர்ந்த ஆனந்த் மனைவி நதியா புகார் மனு அளித்தார். அதில்.. “எனது மகன் ஜீவா சிந்தாமணியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார் கடந்த 15ஆம் தேதி பள்ளிக்கு என் மகன் சென்றார்.

பின்னர் வயிற்று வலிப்பதாக கூறி விட்டு பள்ளியிலிருந்து வெளியே வந்து மாத்திரை வாங்கி விட்டு மீண்டும் பள்ளிக்குச் சென்றார். அப்போது ஜீவாவை அழைத்து தலைமை ஆசிரியர், ஆசிரியர் ஆகியோர் அடித்து சித்ரவதை செய்துள்ளனர். இதில் எனது மகனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து விசாரணை நடத்தி தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளார்.