பொன்மலை ரயில்வே பணிமனையில் 76வது சுதந்திர தினவிழா கொண்டாட்டம்
திருச்சி தென்னக இரயில்வேயின் பொன்மலை மத்திய பணிமனையின் சார்பாக நடத்தப்பட்ட நாட்டின் 76-வது சுதந்திர தினவிழாகொண்டாட்டங்கள்
இந்திய நாட்டின் 76-வது சுதந்திர விழாக் கொண்டாட்டங்கள் பெரும் விமரிசையாக மிகவும் அருமையான முறையில் கொண்டாட பணிமனைப் பணியாளர்கள், சூப்பர்வைசர்கள், அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் முன்னிலையில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தலைமைப் பணிமனை மேலாளர் திரு.ஷியாமாதார் ராம் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து RPF காவலர்கள், St.John ஆம்புலன்ஸ் படையினர், பாரத சாரண-சாரணியர் மற்றும் பணிமனைப் பயிற்சி மையத்தினுடைய பயிற்சியாளர்கள் ஆகியோரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

தலைமைப் பணிமனை மேலாளர் திரு.ஷியாமாதார் ராம் அவர்கள் தமது உரையின் போது கடந்த 2021-22-ம் ஆண்டு மற்றும் நடப்பு நிதியாண்டின் 31.07.2022 வரையில் பல்வேறு துறைகளின் கீழ் நடந்து முடிந்த சாதனைகளை எடுத்துரைத்தார். மேலும் நடப்பாண்டில் மண்டல அளவில் அதிகமான கேடயங்களைப் பெறுவதற்கு அதிகாரிகள். கண்காணிப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் இணைந்த குழுவின் இடைவிடாத முயற்சியினை வெகுவாகப் பாராட்டிப் பேசினார்.
இந்தப் பணிமனையின் உற்பத்தித்திறன், நம்பகத்தன்மை, பாதுகாப்பு மற்றும் பணியாளர் நலன் முதலானவற்றில் தொழிலாளர்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஆற்றிய சிறப்பான முயற்சிகளை வெகுவாகப் பாராட்டிய தலைமைப் பணிமனை மேலாளர், திரு.ஷியாமாதார் ராம் அவர்கள் நாட்டின் ஆஜாதி கா அம்ரூத் மஹோத்சவ் பேரில் 75 நபருக்கு தனிப்பட்ட விருதுகளையும் மற்றும் 128 ஊழியர்கள் அடங்கிய 22 குழுக்களுக்கு விருதுகளையும் வழங்கினார்.

இந்தியா சுதந்திரமடைந்த 75-வது ஆண்டின் நிறைவை குறிக்கும் பொருட்டு, தேசியக் கொடியின் மூன்று வண்ணங்களில் 300 பலூன்களை விருது பெற்றவர்கள் மற்றும் அதிகாரிகள் வானில் பறக்கவிட்டனர். பொன்மலை இரயில்வே உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், பணிமனைப் பயிற்சி மையத்தின் பயிற்சியாளர்கள், பொன்மலை மாவட்ட பாரத சாரண-சாரணியர், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களால் தேசபக்தி சார்ந்த ஆக்கப்பூர்வமான கலாச்சார நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டன. மேலும் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆர்மரி கேட் அருகில் புதுப்பிக்கப்பட்ட இறகுப்பந்து (ஷட்டில் கோர்ட்) மைதானமும் திறக்கப்பட்டது.