தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. அதிலும் சமையலுக்கு அன்றாடம் பயன்படுத்தப்படும் தக்காளி உச்சகட்டமாக திருச்சியில் கிலோ ரூ.100-க்கும், சென்னை உள்பட ஒரு சில மாவட்டங்களில் ரூ.150 என்ற விலையில் விற்கப்படுகிறது. ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு கொண்டு வரப்படும் தக்காளி வரத்து குறைந்ததால் விலை அதிகரித்து விற்பதாக கூறப்படுகிறது. வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி இருந்தார்.
இந்தநிலையில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் தக்காளி கிடைப்பதற்காக ரேஷன் கடைகளில் தக்காளி விற்கப்பட்டு வருகிறது. திருச்சி சுப்பிரமணியபுரம் அமராவதி கூட்டுறவு ரேஷன் கடைகளில் தமிழக அரசின் உத்தரவின்பேரில் மலிவு விலையில் கிலோ ரூ.75-க்கு தக்காளி விற்கப்பட்டது. தக்காளி வரத்து குறைவாக இருப்பதால் ஒருவருக்கு 1 கிலோ தக்காளி மட்டுமே விற்பனை செய்யப்பட்டது.பொதுமக்கள் ஆர்வமுடன் தக்காளியை வாங்கி சென்றனர்.
இதற்கிடையே தக்காளி விலை உயர்ந்துள்ளதால் சில்லறை வியாபாரிகள் சிலர் மொத்த வியாபாரிகளிடம் கூடுதல் விலை கொடுத்து தக்காளியை வாங்கி மார்க்கெட்டுகளில் விற்பனைக்காக குவித்து வைத்து இருந்தனர். ஆனால் பொதுமக்கள் தக்காளியின் விலையை கேட்டு மிக குறைந்தஅளவே வாங்கி சென்றனர். பெரும்பாலானவர்கள் விலையேற்றம் காரணமாக தக்காளியை வாங்காமல் மற்ற காய்கறிகளையே வாங்கி சென்றனர். இதனால் தக்காளி விற்பனை மந்தமாக இருந்தது.