திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் உலக வங்கி நிதியுதவியுடன் திருச்சி மாவட்டத்தில் அந்தநல்லூர், மணிகண்டம், மணப்பாறை, முசிறி, துறையூர் ஆகிய 5 வட்டாரங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த வட்டாரங்களில் தனிநபர் மற்றும் கூட்டு நிறுவனங்களை அணிதிரட்டுதல், உருவாக்குதல் மற்றும் களஅளவிலான செயல்பாடுகளுக்கு ஆதரவை வழங்குதல் போன்ற பணிகளை ஊராட்சி தோறும் மக்களிடையே கொண்டு செல்ல தொழில்சார் சமூக வல்லுனராக பணிபுரியலாம். ஊராட்சிக்கு ஒரு நபர் வீதம் சம்பந்தப்பட்ட ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மூலம் தேர்வு செய்ய தகுதி உடைய நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மகளிர் சுயஉதவிக்குழுவை சேர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். அதே ஊராட்சியை சார்ந்தவராக இருத்தல்வேண்டும். 25-லிருந்து 45 வயது உடையவராக இருத்தல் வேண்டும். பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக வங்கியியல், சமூகப்பணி, வணிகவியல், வேளாண்மை, வணிக நிர்வாகம், கால்நடை அறிவியல் பட்டம் பெற்றவருக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஆண்டிராய்டுபோன் வைத்திருக்க வேண்டும்.
வாழ்வாதார வளர்ச்சி மற்றும் தொழில் மேம்பாடு செயல்பாடுகளில் ஆர்வம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். சமுதாயம் சார்ந்தஅமைப்புகளின் நிர்வாகியாகவோ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாகவோ இருக்கக்கூடாது. மேற்கண்ட தகுதியுடைய நபர்கள் வரும் 30-ந் தேதி மாலை 5 மணிக்குள் தங்கள் ஊராட்சியில் செயல்பட்டு வரும் கிராம வறுமை ஒழிப்பு சங்கம்/ஊராட்சிஅளவிலான கூட்டமைப்பு அலுவலகம் அல்லது கீழ்கண்ட வட்டார அலுவலகங்களில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
அந்தநல்லூர் வட்டார திட்ட மேலாண்மை அலகு, தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம், கிராம சேவை மைய கட்டிடம் அம்மான்குடி அந்தநல்லூர் ஸ்ரீரங்கம் திருச்சி, மணப்பாறை வட்டார திட்ட மேலாண்மை அலகு, தமிழ்நாடுஊரக புத்தாக்க திட்டம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகம் மணப்பாறை திருச்சி, மணிகண்டம் வட்டார திட்ட மேலாண்மை அலகு, தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் கிராம சேவை மைய கட்டிடம் அளுந்தூர் பாத்திமாநகர் திருச்சி, முசிறி வட்டார திட்ட மேலாண்மை அலகு, தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் வட்டார சேவை மைய கட்டிடம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகம் முசிறி திருச்சி, துறையூர் வட்டார திட்ட மேலாண்மை அலகு, தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் சுயஉதவிக்குழு கட்டிடம் சிங்களாந்தபுரம் துறையூர் திருச்சி.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.