திருச்சி மாவட்டம், மணப்பாறை நகரின் மையப்பகுதியில் மிகவும் புகழ்பெற்ற வேப்பிலை மாரியம்மன் கோவில் உள்ளது. சுமார் 500 ஆண்டுகள் பழைமையான இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா நடைபெறும். இதே போல் இந்த ஆண்டும் திருவிழா ஏப்ரல் 24 ம்தேதி பூச்சொரிதழ் விழாவுடன் துவங்கி தொடர்ந்து மே 1 ம் தேதி காப்பு கட்டுதல் விழாவும் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து தினசரி மண்டகப்படி விழாக்கள் நடைபெற்று வந்த நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பால்குட விழா ஞாயிற்றுக்கிழமையும், வேடபரி விழா திங்கள் கிழமையும் நடைபெற்றது. விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
இறுதி விழாவான விடையாற்றி எனும் காப்புகளைதல் மற்றும் மஞ்சள் நீராட்டு இன்று நடைபெற்றது. அம்மனுக்கு அணிவிக்கப்பட்ட மாலை, காப்பு உள்ளிட்டவைகளை மேளதாளங்கள் முழங்க கோவில் பூசாரி பாண்டியன் சுமந்து செல்ல ஊர்வலம் ராஜவீதியின் வழியாக வாகைக்குளம் அருகில் உள்ள கோவில் கிணற்றை அடைந்ததும், அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பின்னர் நீரில் கரைக்கப்பட்டன.
அதேபோல் முளைப்பாரிகளும் நீரில் விடப்பட்டன. அதனைத் தொடர்ந்து மஞ்சள் நீராட்டும் நடைபெற்றது. அதில் மஞ்சள் மற்றும் வண்ணப்பொடிகள் கலந்த நீரால் ஒருவருக்கொருவர் ஊற்றிக்கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.