திருச்சி வந்தடைந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி…
44 ஆவது செஸ் விளையாட்டுப் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதை முன்னிட்டு, மதுரையிலிருந்து வரப்பெற்ற செஸ் ஒலிம்பியாட் ஜோதியினை , திருச்சி மாவட்ட விளையாட்டு அரங்கில் இன்று காலை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் பெற்றுக்கொண்டு, அதனை விளையாட்டு வீரர்கள், மாணவர்கள், காவலர்கள் உள்ளடங்கிய ஜோதி ஓட்டக் குழுவினரிடம் வழங்கி, திருச்சியில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு ஜோதி ஓட்டத்தினை தொடங்கி வைத்தார் .

இந்நிகழ்வில் மாநகர காவல் ஆணையர் ஜி.கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாநகர காவல் துணை ஆணையர் பி. ஸ்ரீதேவி, சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.இனிகோ இருதயராஜ், அ.சௌந்தரபாண்டியன், எஸ்.ஸ்டாலின்குமார், ந.தியாகராஜன், எம்.பழனியாண்டி, மாவட்ட விளையாட்டு அலுவலர் ஞானசுகந்தி, மண்டலக் குழுத் தலைவர் ஜெயநிர்மலா மற்றும், அலுவலர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர்
பங்கேற்றனர்.
செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் திருச்சி மாவட்ட விளையாட்டரங்கில் தொடங்கி, மாவட்ட ஆட்சித்தலைவர் முகாம் அலுவலகம் வழியாக மன்னார்புரம், ரயில்வே ஜங்சன் மேம்பாலம், ரயில்வே ஜங்சன், தலைமை அஞ்சல் நிலையம் மகாத்மா காந்தியடிகள் சிலை ரவுண்டானா, மாநகராட்சி சாலை, கோர்ட்ரோடு, சாலைரோடு, காவிரிப் பாலம், அம்மா மண்டபம், ஸ்ரீரங்கம், சமயபுரம் மற்றும் முக்கொம்பு வரை சென்று பின்னர் மாவட்ட விளையாட்டரங்கம் வந்தடைந்து, இன்று மாலை சென்னைக்கு இந்த ஜோதி எடுத்துச் செல்லப்படுகிறது.