திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்குள் உள்ள கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் நேற்று மதியம் விசாரணை நடந்து கொண்டிருந்தது. அப்போது ஓரிரு தினங்களுக்கு முன்பு திருச்சி ஜங்சன் ஆட்டோ ஸ்டாண்டில் பெண் ஆட்டோ டிரைவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஒருவர் மீதான ஜாமீன் விசாரணை நடந்தது. அந்த நபருக்கு ஜாமீன் கொடுக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வாதம் நடந்து கொண்டிருந்தது. அப்போது உள்ளே நுழைந்த எடமலைப்பட்டி புதூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த முகமது அலி என்பவர், விசாரணையை தன்னுடைய செல்போன் மூலம் வீடியோவாக பதிவு செய்தார். இது குறித்து கூடுதல் நீதிமன்றத்தின் தலைமை அலுவலர் ஹேமா செசன்ஸ் நீதிமன்ற காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் முஹம்மது அலியை கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட இவர் மீது ஏற்கனவே ஒரு வழக்கு நிலுவையில் இருப்பது குறிப்பிடதக்கது.