லாரி மீது ஆம்னி வேன் மோதிய விபத்தில் இளைஞர் பலி
திருச்சி, ஜன.20 திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் அருகே கல்லணை சாலையில் உள்ள கிளிக்கூட்டில் நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஓட்டுநர் படுகாயம் அடைந்தார்.
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி கடைவீதி பகுதியைச் சேர்ந்தவர் மாதேஷ் மகன் சிவகுமார்(27). சேலம் மாவட்டம் ஆத்தூர் காட்டுக்கொட்டை காந்திநகரைச் சேர்ந்த குமரேசன் மகன் ராஜேஷ் (31) மற்றும் இவருடைய அப்பா வயதான குமரேசன்(55), அம்மா இந்திராணி (50)இவர்கள் அனைவரும் சேலம் மாவட்டத்தில் இருந்து ஆம்னி வேனில் திருநாகேஸ்வரம் செல்வதற்காக கல்லணை சாலையில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது கிளிக்கூடு பகுதியில் சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராதமாக ஆம்னி வேன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். டிரைவர் சிவகுமார் படுகாயமடைந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் பட்ட சிவகுமாரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த ராஜேஷ் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆம்னி வேனில் பயணம் செய்த குமரேசன் , இந்திராணி எந்த காயுமின்றி உயிர் தப்பினார்கள் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த கொள்ளிடம் போலீசார் மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.