தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு வெள்ளனூரில் நடைபெற்ற நிலா திருவிழா
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வெள்ளனூரில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு லால்குடி இயற்கை விழுதுகள் மற்றும் திருச்சி, லால்குடி ஆஸ்ட்ரோ கிளப் சார்பில் நிலா திருவிழா நடைபெற்றது.
தேசிய அறிவியல் நாள் ஆண்டு தோறும் பிப்ரவரி 28 ஆம் நாளில் கொண்டாடப்பட்டு வருகிறது. சர். சி. வி. இராமன் தனது புகழ்பெற்ற ராமன் விளைவை இந்நாளிலேயே கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பு உலகளாவிய பெருமையை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்ததுடன் உயரிய விருதான நோபல் பரிசும் (1930) இவருக்கு கிடைத்தது. அந்நிகழ்வின் நினைவாகவும் அறிவியல் என்பது அடித்தட்டு மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கோடும் இந்திய அரசு இந்நாளைத் தேசிய அறிவியல் நாளாகப் பிரகடனப்படுத்தியது.
இயற்பியல் துறை உதவி பேராசிரியர் கபிலன் வரவேற்புரை ஆற்றி, நமது தொலைநோக்கி பற்றி எடுத்துரைத்தார். இந்த நிலா திருவிழா நிகழ்ச்சியில் விண்வெளி பற்றிய பல அதிசய நிகழ்வுகளை இணையதளம் மூலம் தெரிந்து கொண்டு அதை தொலைநோக்கி வழியாக கண்டு களித்து அறிவியல் வளர்ச்சியை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் ஒவ்வொரு நாளும் நிலவானது 12 டிகிரி நகர்வதை வைத்து திதி கணக்கிடுகிறார்கள் என்றும், ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தில் நிலவு பயணம் செய்யும் போது அந்த குறிப்பிட்ட நட்சத்திரத்தின் பெயர் தமிழ் மாதமாக குறிக்கப்படுகிறது என்பதையும், நிலவின் முக்கியத்துவம் குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.
இந்த நிகழ்வில் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு அதிநவீன தொலைநோக்கி மூலம் அழகிய நிலா, வியாழன் கோள் மற்றும் வியாழனின் நான்கு நிலாக்கள், வெள்ளிகோள், செவ்வாய் கோள், ஆகியவை நேரடியாக காண்பிக்கப்பட்டது.இந்நிகழ்வில் 150 க்கு மேற்பட்ட குழந்தைகள் பெரியோர்கள் நிலவை அருகில் பார்த்து கண்டு மகிழ்தனர்.