கிராமப்புற அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி
கிராமப்புற அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கஸ்பா பொய்கை பட்டியில் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. மிகவும் பின் தங்கிய பகுதியில் உள்ள இப்பள்ளியில் பொய்கைப்பட்டி, கல்பாளையத்தான்பட்டி, ரெங்ககவுண்டம்பட்டி, ஆவிக்காரபட்டி, திருமலையான்பட்டி, ஆனாம்பட்டி, எருதிக்கவுண்டம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச்சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் மாணவர்கள் கம்ப்யூட்டர் பயிற்சி பெற போதிய வசதிகள் இல்லாதபட்சத்தில் மாணவர்களுக்கு மணப்பாறை அருகே எடத்தெருவில் உள்ள ஜிஹெச்சிஎல் என்ற தனியார் பஞ்சாலை நிர்வாகம் மற்றும் மதுரையைச் சேர்ந்த பெட்கிராட் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 50 நாட்கள் நடைபெறும் பயிற்சி வகுப்பில் 11 மற்றும் 12 வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற உள்ளனர். பள்ளியில் நடைபெற்ற கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பின் தொடக்க விழாவில் தனியார் பஞ்சாலை (ஜி.ஹெச்.சி.எல்) சிஇஓ பாலகிருஷ்ணன் குத்துவிளக்கேற்றி, மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் வகுப்பிற்கான கல்வி உபகரணங்களை வழங்கி வகுப்புகளை தொடங்கி வைத்தார். விழாவில் மதுரை பெட்கிராட் பயிற்சி நிறுவன நிர்வாக இயக்குனர் சுப்புராம், ஜிஹெச்சிஎல் பவுண்டேசன் அதிகாரி சுஜித், பஞ்சாலை நிர்வாக அதிகாரி தமிழ்செல்வன், பொய்கைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரோஸ்லின்சகாயமேரி, பள்ளி தலைமை ஆசிரியர் லதா, உதவி தலைமை ஆசிரியர் பிரான்சிஸ்சேவியர், பெட்கிராட் பயிற்சி நிறுவன பொதுச்செயலாளர் அங்குசாமி, பொருளாளர் கிருஷ்ணவேணி , துணைத்தலைவர் மார்ட்டின், பயிற்சியாளர் கண்ணன் உள்ளிட்ட தனியார் பஞ்சாலை அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கும் நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் விழாவின் இறுதியில் தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.