மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் யானைக்கு ரூ.5 லட்சத்தில் புதிய குளியல் தொட்டி
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் சார்பாக திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் பராமரிக்கப்பட்டு வரும் யானை லட்சுமிக்கு ஷவர் வசதியுடன் கூடிய குளியல் தொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ரூ.5 லட்சம் செலவில் யானை லட்சுமி குளிப்பதற்கு இந்த குளியல் தொட்டி கட்டப்பட்டுள்ளது. இன்று மலைக்கோட்டை கோவில் வளாகத்தில் நடைபெற்ற
இந்த நிகழ்ச்சியில் தாயுமானசுவாமி கோவில் உதவி ஆணையர் விஜயராணி கலந்து கொண்டார்.

இதில் அதிகாரிகளின் அனுமதியுடன் யானைப்பாகன் லட்சுமி யானையை குளியல் தொட்டிக்குள் மெதுவாக அழைத்து வந்தார். அப்போது புதிதாக குளியல் தொட்டியை பார்த்த யானை லட்சுமி குதூகலத்துடன் துள்ளி குதிக்க இதனை பார்ப்பதற்காக தாயுமானசுவாமி கோவில் ஊழியர்கள் மற்றும் அருகில் உள்ள பொதுமக்கள் ஆர்வத்துடன் திரண்டு கண்டு களித்தனர்.

இது குறித்து திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் உதவி ஆணையர் விஜயராணி கூறுகையில், மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் யானை லட்சுமிக்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் வழிகாட்டுதலின் பேரிலும் அமைச்சர் சேகர்பாபு ஆணையின் பேரிலும் 4 உயரத்தில் குளியல் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த குளியல் தொட்டி மூலமாக யானை தினமும் குளிப்பதற்கு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து இந்த குளியல் தொட்டி அமைப்பதற்கு ரூ.5 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது. லட்சுமி யானை இனிமேல் சுகாதார முறையில் தினமும் மனமகிழ்ச்சியோடு குளிப்பதற்கு உதவிகள் செய்யப்பட்டு உள்ளது என்றார்.