வாகன சோதனையில் ரூ.11 லட்சம் சிக்கிய விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு சென்ற திருச்சி டிஎஸ்பி

0 552
Stalin trichy visit

திருச்சி கே.கே.நகர் ஈ.வி.ஆர்.சாலையில் உள்ள அரிசிகுடோன் அருகே கடந்த 10 நாட்களுக்கு முன்பு கே.கே.நகர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தினர்.

போலீசாரை கண்டதும் காரில் இருந்து இறங்கி ஒருவர் ஓட்டம் பிடித்தார். அவரை விரட்டி சென்று பிடித்தனர். காரில் சோதனை நடத்தியபோது, இருக்கையின் அடியில் கட்டு, கட்டாக ரூ.11 லட்சம் இருந்தது தெரியவந்தது. அந்த பணத்துக்கு உரிய ஆவணம் எதுவும் இல்லை. இதையடுத்து காரையும், பணத்தையும் பறிமுதல் செய்து கே.கே.நகர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

இதற்கிடையே காரில் இருந்து இறங்கி ஓடிய நபரிடம் விசாரித்தபோது அவர், திருச்சி உணவு கடத்தல் தடுப்புபிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் என்பது தெரியவந்தது. மேலும் அவர், தனது நண்பர்கள் 2 பேருடன் காரில் பணத்துடன் வந்ததும் தெரியவந்தது.

இது குறித்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பணத்துக்கு உரிய ஆவணம் இல்லாததால் அது முறைகேடாக வந்த பணமா? என போலீசார் ரகசிய விசாரணை நடத்தினார்கள். இதையடுத்து போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரனை காத்திருப்போர் பட்டியலுக்கு இடமாற்றம் செய்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.