திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானங்களில் வருபவர்கள் தங்கத்தை அதிக அளவில் கடத்தி வருவது தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் சுங்கத் துறை ஆய்வாளர் ஒருவர் தங்கம் கடத்தலுக்கு உறுதுணையாக இருந்து வந்ததை அறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்து நடவடிக்கை எடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து சுங்கத் துறையில் பணியாற்றி வந்த 16 பேர் வேறு பணியிடங்களுக்கு கூண்டோடு மாற்றப்பட்டனர். இதனைத்தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு தங்கம் கடத்தல் எதிரொலியாக சுங்கத் துறை துணை ஆணையர் சரவணகுமார் மாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்துகொண்டிருந்தனர். அப்போது புதுக்கோட்டையைச் சேர்ந்த சரவணன் 23 என்ற பயணி தனது உடலில் மறைத்து ரூ.40.5 லட்சம் மதிப்பிலான 840 கிராம் கடத்தல் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்துகொண்டிருந்தனர். அப்போது விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த திருச்செல்வம்(37) என்பவர் தனது உடலில் மறைத்து எடுத்து வந்த 785 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதன் இந்திய ரூபாயின் மதிப்பு 36.9 லட்சம் என தெரிய வருகிறது. சுங்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்து அவரிடமிருந்து தங்கத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.