தண்ணீர் தொட்டியில் சண்டையிட்ட பாம்பு, உடும்பை லாவகமாக பிடித்த தீயணைப்பு வீரர்கள்
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது இஸ்மாயில். அதிமுக பொதுக்குழு உறுப்பினரான இவருக்கு சொந்தமான காலிமனைப் பகுதியில் தண்ணீர் பிடித்து வைத்துக் கொள்வதற்கு ஏதுவாக ஒரு பெரிய தொட்டி கட்டி வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் அந்த தண்ணீர் தொட்டி பயன்பாடின்றி அதனை ஒட்டி புதர் மண்டி இருந்தது. இந்நிலையில் அதனை ஊழியர்கள் சுத்தம் செய்ய சென்ற போது தொட்டியில் பாம்பும், உடும்பும் இருப்பதை பார்த்து முகமது இஸ்மாயிலிடம் தெரிவித்தனர். உடனே அவர் துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது உடும்பும், பாம்பும் சண்டையிட்டுக் கொண்டிருந்தது. இதையடுத்து முதலில் உடும்பை கருவி மூலம் லாவகமாக பிடித்து ஒரு பையில் போட்டு வைத்தனர். அதன் பின்னர் பாம்பை பிடிக்க முயன்ற போது பாம்பு படமெடுத்து நின்றது.
அதன்பின்னர் அது நல்ல பாம்பு என்பது தெரியவரவே போராடி பாம்பையும் பத்திரமாக பிடித்து ஒரு பையில் போட்டி கட்டி எடுத்துச் சென்று துவரங்குறிச்சி வனத்துறையினரிடம் ஒப்படைத்த பின்னர் வனப்பகுதியில் விடப்பட்டது.