இரவு நேரங்களில் பட்டாசுகளை உற்பத்தி செய்யகூடாது; சுகாதார கூடுதல் இயக்குனர் எச்சரிக்கை
திருச்சி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குனர் சித்தார்த்தன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியதாவது:-
பட்டாசு உற்பத்தியில் முதன்மை வகிக்கும் தமிழகத்தில் தயாரிக்கப்படும் பட்டாசுகள் தான் இந்தியா முழுவதிற்கும் அனுப்பப்படுகின்றன.
அந்த வகையில் வருகிற நவம்பர் மாதம் 4-ந்தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு தொழிற்சாலையில் அதிக அளவு பட்டாசு உற்பத்தியை மேற்கொண்டு வருகின்றனர். பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்கள் அனைவரும் உரிமத்தில் எவ்வகையான பட்டாசுகளை தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதோ அத்தகைய பட்டாசுகளை மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும். பட்டாசு உற்பத்திக்கு தேவைப்படும் மருந்து கலவையினை முழுமையாக பயன்படுத்த வேண்டும்.
பட்டாசு உற்பத்திக்கு ஒரு நாள் தேவைக்கு மட்டுமே ரசாயன கலவையினை பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். இரும்பிலான பொருட்களை உற்பத்தியில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
இரவு நேரங்களில் பட்டாசுகளை தொழிற்சாலையில் உற்பத்தி செய்ய கூடாது. தொழிலாளர்கள் தொலைபேசியை எடுத்து செல்லக்கூடாது. மது அருந்திய தொழிலாளர்களை தொழிற்சாலைக்குள் அனுமதிக்கக் கூடாது. பருத்தி இழையிலான ஆடைகளையே தொழிலாளர்கள் அணிய வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.