பலத்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி
திருச்சி மாவட்டம் முசிறி, தா.பேட்டை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் உள்பட பலரும் கடும் அவதி அடைந்தனர். பொதுமக்களை வெயில் வாட்டி வதைத்த நிலையில் நேற்று மாலை முசிறி, தா.பேட்டை பகுதியில் வானில் கருமேகங்கள் சூழ்ந்தது.
பின்னர் மிதமான மழை பெய்தது. இதேபோன்று தா.பேட்டை பகுதியில் திடீரென மின்னலுடன் பலத்த இடி சத்தம் கேட்டதால் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. தா.பேட்டை அருகே தும்பலம், சிட்டிலரை உள்ளிட்ட பகுதியில் பலத்த மழை காரணமாக சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
முசிறி, தா.பேட்டை உள்ளிட்ட பகுதியில் திடீரென பெய்த இந்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வெப்பம் தணிந்து இதமான காற்று வீசியதால் குளிர்ச்சி நிலவியது.