சிறைக் காவலில் மரணமடைந்த ஸ்டான் ஸ்வாமி மரணத்தை கண்டித்து திருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அருட்தந்தை ஸ்டான் ஸ்வாமி. 84 வயதாகும் அவர், ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக நீண்டகாலமாகப் போராடிவந்தவர். எல்கார் பரிஷத் வழக்கில், சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச்சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில், ஏராளமான உடல் உபாதைகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், ஜூலை 5-ம் தேதி மரணமடைந்தார். இவரது மரணம் நாடு முழுவதும் அரசியல் கட்சிகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் உட்பட பல தரப்பினர் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக தமிழகம் முழுவதும் ஸ்டான் ஸ்வாமி மரணத்தைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே திருச்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக சமூக செயற்பாட்டாளர் ஸ்டான் ஸ்வாமி சிறைகளில் மரணமடைந்ததை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
