மணப்பாறை அண்ணா வளைவு லாரி மோதி இடிந்து விழுந்தது
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த இளங்காகுறிச்சியில் அறிஞர் அண்ணா வளைவு உள்ளது. பொன்விழா கண்ட இந்த வளைவை தேங்காய் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று கடக்க முயன்றது. அப்போது லாரியின் மேல் பகுதி அண்ணா வளைவின் மீது மோதியது.
இதில் அண்ணா வளைவின் மேல் பகுதி தனியாக உடைந்து லாரியின் மேல் பகுதியில் விழுந்து விட்டது. இதே போல் சாலையோரம் இருந்த வளைவின் இரண்டு தூண்களும் இடிந்து விழுந்தது. நீண்ட காலமாக உள்ள அண்ணா வளைவு இடிந்து விழுந்ததால் அந்த பகுதி மக்கள் பலரும் அங்கு திரண்டனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி லாரியை அப்புறப்படுத்தினர். லாரியின் உரிமையாளர் மீண்டும் அண்ணா வளைவை அமைத்து தருகிறேன் என்று கூறியதாக தெரிகிறது. இதையடுத்து மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.