திருச்சியில் இருந்து மதுரை நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த கார் திருச்சி– மதுரை தேசிய நெடுஞ்சாலையில் துவரங்குறிச்சியை அடுத்த செவந்தாம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள தடுப்புக் கம்பியில் மோதியது.
தடுப்புக் கம்பியில் மோதிய கார் அதே வேகத்தில் சென்றதால் கம்பி காரின் முன்பகுதியில் குத்தி பின்பகுதி வழியாக வெளியே வந்தது. இருப்பினும் காரை ஓட்டி வந்தவர் மட்டுமே இருந்ததால் எந்தவித அசம்பாவிதமும் நிகழவில்லை.
பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினர் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தடுப்பு கம்பியில் சிக்கி இருந்த காரை மீட்க தடுப்பு கம்பியை அப்புறப்படுத்தி காரை மீட்டனர். மேலும் சம்பவம் தொடர்பாக துவரங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தினர்.