மணப்பாறை அருகே 45 கிலோ குட்கா பறிமுதல் : ஒருவர் கைது
திருச்சி, நவ.26 மணப்பாறை அருகே துவரங்குறிச்சியில் காவல்துறையினர் 45 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்படை பிரிவிற்கு துவரங்குறிச்சிக்கு உட்பட்ட பகுதியில் குட்கா விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. தகவலை அடுத்து தனிப்படையினர் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே துவரங்குறிச்சியில் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது செட்டியபட்டியைச் சேர்ந்த பொன்ராம் (55) என்பவர் அவரது பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலையை மறைத்து வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது.பொன்ராமை கைது செய்த தனிப்படை பிரிவினர் விற்பனைக்காக வைத்திருந்த 45 கிலோ எடையுள்ள ஹான்ஸ் மற்றும் Cool Lip பாக்கெட்டுகள் அனைத்தையும் பறிமுதல் செய்தனர். அதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட பொன்ராம் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட குட்காவை துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.