சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக 127 கிலோ தங்கம் கிடைத்துள்ளதாக தகவல்
அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தினமும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்ய வருவார்கள். அப்படி வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களை கோவில் உண்டியலில் காணிக்கையாக செலுத்துவார்கள். இதை கோவில் நிர்வாகம் சார்பில் மாதமிருமுறை எண்ணப்படுவது வழக்கம்.
இந்நிலையில் கோவிலில் உள்ள தங்கத்தின் மொத்த மதிப்பு எவ்வளவு என்று தெரியும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக கணக்கெடுக்கும் பணியை தொடங்கிவைத்தார். அதைத்தொடர்ந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ரவிசந்திந்திரபாபு, திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, கோவில் இணை ஆணையர் கல்யாணி ஆகியோர் முன்னிலையில் உற்சவர் அம்மன் உள்ள மண்டபத்தின் முன்பு கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.
இதில் 127 கிலோ 385 கிராம் தங்கம் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த தங்கத்தை சுத்தப்படுத்தும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர். அப்பணி நிறைவு பெற்றவுடன் தங்கத்தை மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு தங்க கட்டிகளாக மாற்றப்படும் என்று கூறப்படுகிறது.