திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்துள்ள முத்தையம்பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் சரோஜா(வயது 55). கூலித் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் மணிமேகலை(25). கடந்த மாதம் 10.9.2021 தேதி துறையூரை அடுத்து உள்ள பெருமாள் மலை அடிவாரத்தில் மணிமேகலைக்கு பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா பூலாம்பாடி கிராமத்தை சேர்ந்த சிவா(30) என்பவருக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் திருமணம் நடைபெற்ற நாள் முதல் மணிமேகலை தனது கணவர் வீட்டில் வசித்து வந்தார். கடந்த 8ந் தேதி தனது கணவருடன் தாய் வீட்டிற்கு முத்தையம்பாளையம் கிராமத்திற்கு வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அடுத்த நாளான 9ந் தேதி இரவு வீட்டில் இருந்த எலி பேஸ்ட் சாப்பிட்டுள்ளார்.
இதை பார்த்த அவரது கணவர் சிவா மற்றும் அவரது தாயார் ஆகியோர் உடனடியாக மணிமேகலையை மீட்டு முதல்கட்ட சிகிச்சைக்காக துறையூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்கள் அதன் பின்பு அங்கு முதல் கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி மணிமேகலை இறந்தார். இதை அடுத்து மணிமேகலையின் தாயார் சரோஜா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.