ஏ.பி.வி.பி. அலுவலகத்தில் எம்.சாண்ட் மணல் கலந்த மர்மபொருள் வீச்சு
திருச்சி மேலசிந்தாமணி காவேரி பூங்கா பகுதியில் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி.) அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் எம்.சாண்ட் மணல் கலந்த மர்மபொருளை திடீரென அலுவலகத்தின் ஜன்னல் வழியாக தூக்கி வீசியதாக கூறப்படுகிறது. இது பற்றி அறிந்த அமைப்பின் நிர்வாகிகள் அங்கு திரண்டனர்.
இது குறித்து கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில், “திருச்சியில் ஏ.பி.வி.பி. அலுவலகம் மர்ம நபர்களால் சூறையாடப்பட்டுள்ளது. இது பொறுப்பாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆகவே இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறி இருந்தனர். மேலும், இந்த சம்பவத்தை கண்டித்து சிந்தாமணி அண்ணாசிலை அருகே இன்று (சனிக்கிழமை) காலை அகிலபாரதீய வித்யார்த்தி பரிஷத் சார்பில் ஆர்ப்பாட்டமும் நடத்த உள்ளனர்.