மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும். விவசாய விளை பொருட்களுக்கு லாபகரான விலை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் கடந்த 10 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் அய்யாக்கண்ணுவுக்கு மர்ம நபர் செல்போனில் மிரட்டல் விடுத்ததாக உறையூர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகார் மனுவில், “நான் சுய விளம்பரத்துக்காக போராட்டம் நடத்துவதாகவும், போராட்டம் என்கிற பெயரில் போலீசாரை அலைக்கழிப்பதாகவும், போராட்டத்தை கைவிடாவிட்டால் என்னவேண்டுமானாலும் செய்வேன் என்று கூறி மர்ம நபர் மிரட்டல் விடுத்தார். ஆகவே அந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறி இருந்தார்.