நாகப்பட்டினத்தை சேர்ந்தவர் ஜெயசீலன். இவர் வேளாங்கண்ணியில் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். இந்நிலையில் நேற்று தனது காரை வாடகை ஸ்டான்டில் நிறுத்திவிட்டு சென்றுள்ளார். பின்னர் சிறிது நேரத்திற்கு பிறகு வந்து பார்த்தபோது கார் திருட்டு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வேளாங்கண்ணி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த சுதாகர் (வயது 40). இவர் வேளாங்கண்ணியில் திருடிய காரை சென்னை வரை தனியாக செல்ல விரும்பாத சுதாகர் திருச்சி மத்திய பஸ் நிலையம் வந்து சென்னை செல்வதற்கு பயணிகளை ஏற்றி கொண்டு இருந்தார். இதனை பார்த்த மத்திய பஸ் நிலைய வாடகை கார் ஓட்டுனர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த கண்டோன்மெண்ட் போலீசார் அவர்களை சமாதானம் செய்ய முயன்றனர். அப்போது நடத்திய விசாரணையில் சுதாகர் கொண்டு வந்த கார் வேளாங்கண்ணியில் திருடப்பட்டது என்பது தெரியவந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்து காரை பறிமுதல் செய்தனர்.