திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையின் ஆராய்ச்சி மற்றும் ஆய்வு பிரிவு இணை இயக்குனர் டாக்டர் பிலிப் தாமஸ், அமெரிக்காவின் புகழ்பெற்ற ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள 2020 வரையிலான ஆராய்ச்சி வெளியீடுகள் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்ட உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். இந்த தர வரிசை உலக அளவில் சுமார் 70 இலட்சம் விஞ்ஞானிகளில் பதிப்புகளின் பல்வேறு திறன்களை கருத்தில் கொண்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. டாக்டர் பிலிப் தாமஸ் கண் மருத்துவ ஆராய்ச்சியில் இந்திய அளவில் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மருத்துவ ஆராய்ச்சி மற்றும் நுண்ணுயிரியல் சார்ந்த அவரது ஆய்வுகளின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு இந்த அங்கீகார விருது வழங்கப்பட்டுள்ளது. அவர் 173 ஆராய்ச்சி கட்டுரைகளையும், 14 தேசிய மற்றும் சர்வதேச பாட நூல்களில் பல்வேறு அத்தியாயங்களையும் எழுதியுள்ளார். மேலை நாடுகளில் தனது ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பித்து உரையாற்றிய உள்ளார். கருவிழியில் நுண்ணுயிரிகளாலும், பூஞ்சைகளாலும் ஏற்படும் பாதிப்புகள் சார்ந்த துறையில் உலக அளவில் சிறந்த நிபுணர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.
இவர் ஏற்கனவே 1997-ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் சிறந்த மருத்துவ விஞ்ஞானிக்கான விருதை பெற்றுள்ளார். மேலும் 2018-ல் லண்டனில் உள்ள “ராயல் காலேஜ் ஆப் பெதாலஜஸ்ட்ஸ்” இவரைக் கவுரவ உறுப்பினராக தேர்வு செய்திருந்தது. சிறந்த மருத்துவ விஞ்ஞானிக்காக உலக அங்கீகார விருது பெற்ற டாக்டர் பிலிப் தாமசை ஜோசப் கண் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பிரதீபா, உதவி இயக்குனர் டாக்டர் அகிலன் அருண்குமார், மனித வள மேம்பாட்டு துறை அதிகாரி ஆர்த்தி, டாக்டர்கள் ஆண்டனி ஆரோக்கியதாஸ், தனுஜா, கலியமூர்த்தி, அர்ச்சனா மற்றும் நிர்வாக அலுவலர் சுபாபிரபு உள்ளிட்டோர் பாராட்டி வாழ்த்தினர்.