செல்பேசிக் கொண்டிருந்த இளைஞர் மின்னல் தாக்கி உயிரிழப்பு
திருச்சி, நவ.9 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பல்லபுரம் கிராமத்தில் ப்ளூடூத் மூலம் செல்போனில் பேசிக் கொண்டிருந்த வாலிபர் மீது இடி மின்னல் தாக்கியதில் படுகாயமடைந்து உயிரிழந்தார்.
லால்குடி அருகே பல்லபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகன் ஜெயக்குமார் (28). இவர் லால்குடி அருகே குமுளூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் தற்காலிகமாக ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. நேற்று மாலை முதல் லால்குடி பகுதியில் இடி, மின்னல், காற்றுடன் மழை பெய்தது. இந்நிலையில் வீட்டிலிருந்த ஜெயக்குமார் ப்ளூடூத் மூலம் தனது செல்போனில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஜெயக்குமார் மீது இடி மின்னல் தாக்கியது.இதில் படுகாயம் அடைந்த ஜெயக்குமார் அங்கேயே மயங்கி விழுந்தார்.இதை கண்ட அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டார் என கூறினார்.
இது குறித்து தகவலறிந்த லால்குடி போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக லால்குடி அரசுமருத்துவமனையில் அனுமதித்தனர்.பின்னர் இச்சம்பவம் குறித்து லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.