திருச்சி, நவ. 9 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் கல்லக்குடியில் உள்ள திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் கார் டயர் வெடித்து மோட்டார் பைக் மீது மோதியதில் தொழிலாளி பலியானார்.
கல்லக்குடி கே.கே. நகர் பகுதியைச் சேர்ந்தவர் அகஸ்டின் என்கின்ற அம்ப்ரோஸ் (38) . இவர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார்.இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை கல்லக்குடியில் இருந்து வடுகர் பேட்டை க்கு திருச்சி சிதம்பரம் தேசிய சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 44 வயதான கணபதி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் (44) ஆகியோர் சிதம்பரத்தில் உள்ள ஒரு கோயிலுக்கு காரில் சென்று விட்டு மீண்டும் திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தனர். காரை கணபதி ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் கல்லக்குடி பகுதியில் வந்து கொண்டிருந்தபோது காரின் டயர் வெடித்ததால் கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதில் மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்த அகஸ்டின் மீது கார் எதிர்ப்பாராதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அகஸ்டின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.காரில் சென்ற கணபதி பால்ராஜ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதில் காரின் முன்பக்கம் பலத்த சேதம் அடைந்தது.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த கல்லக்குடி போலீசார் சம்பவ இத்திற்க்கு விரைந்து சென்று விபத்தில் பலியான அகஸ்டின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காரில் வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் இந்த விபத்து குறித்து கல்லக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.