பள்ளி வளாகங்களை தவறாக பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை : அமைச்சர் அன்பில் மகேஸ் எச்சரிக்கை
திருச்சி, ஜூலை 15 பள்ளி வளாகங்களை தவறாக பயன்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் -திருச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஓரணியில் தமிழ்நாடு பரப்புரைக்காக திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் War Room இன்று திறக்கப்பட்டது. பள்ளி கல்வி துறை அமைச்சரும் தெற்கு மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஷ் அதனை திறந்து வைத்தார். அந்த War Room செயல்பாடுகளை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்…
யார் சொன்னால் செய்வார்கள் – யார் வெற்று அறிவிப்பு விடுவார்கள் என மக்களுக்கு நன்றாக தெரியும். நாங்கள் அறிவித்தால் அதை நிறைவேற்றுவோம் என்கிற நம்பிக்கை மக்களுக்கு இருக்கிறது. இனி யார் வந்து ரூ.1500 தருகிறோம் ரூ.3000 தருகிறோம் என கூறினாலும் மக்கள் நம்ப மாட்டார்கள்.
ப வடிவத்தில் மாணவர்கள் அமர வைப்பது சோதனை முயற்சி தான் என ஏற்கனவே கூறியுள்ளோம். ஆசிரியர்கள் மாணவர்களுடன் கலந்துரையாரடும் வகையில் தான் இத்தகைய சோதனை முயற்சியை முன்னெடுத்துள்ளோம். இது குறித்து ஒரு வாரம் கழித்து முதன்மை கல்வி அலுவலர்களிடம் அறிக்கை பெற்று இறுதி முடிவெடுப்போம்.
திருவாரூரில் உள்ள அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்தது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. யார் அதை செய்திருந்தாலும் காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி வளாகங்களை தவறாக பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எங்களின் பலமே எங்கள் கூட்டணி தான். இது கொள்கை கூட்டணி. 2026 லும் இதே கூட்டணி 200 க்கும் அதிகமான தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் திருச்சி திமுக தெற்கு மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.