மணப்பாறையில் போதையில் சாலையில் படுத்துக்கொண்டு ரவுசு செய்த முதியவர்
திருச்சி மாவட்டம். மணப்பாறை மாரியம்மன் கோவில் வளைவு என்பது எப்போதும் பரபரப்பாக காணப்படும். ஏனெனில், திருச்சி மற்றும் விராலிமலை, கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வருகிற அரசு மற்றும் தனியார் பேருந்துகள், மணப்பாறை நகர பேருந்து நிலையத்திற்கு செல்வதற்கு முக்கியமான சாலை என்பதால் எப்போதும் இந்த சாலை போக்குவரத்து நெரிசல் மிகுந்தே காணப்படும். நேற்று மாலை கஞ்சா போதையில் வந்த பெரியவர் ஒருவர் அப்பகுதியில் அங்கும், இங்குமாக சுற்றி திரிந்தார். பின்னர், அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீசாரை திட்டியவாறே தட்டுத்தடுமாறி சென்ற இவர் போதை தலைக்கேறியதும் சாலையின் குறுக்கே பஞ்சு மெத்தையில் படுப்பது போல சாவகாசமாக படுத்துக் கொண்டார். போதையில் இருந்தவரை அப்புறப்படுத்த வாகன ஓட்டிகள் பலர் முயன்றும் முயற்சி பலனளிக்கவில்லை. இதனால், லாரி, பஸ் உள்ளிட்ட வாகனங்கள் பேருந்து நிலைய பகுதிக்கு செல்ல முடியாமல் போக்குவரத்து தடைபட்டது. பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் செய்வதறியாது திகைத்து நிற்க, யார் ஹாரன் அடிக்கிறது என கேட்டவாறு தடுமாறி எழுந்த கஞ்சா ஆசாமி சாலையின் குறுக்கு நெடுக்குமாக ஆபாசமாக பேசிய வாறு சுற்றி திரிந்து அப்பகுதியையே கலங்கடித்தார். பெரியவரின் சேட்டை காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.