திருச்சி உறையூர் தெலுங்கு செட்டி தெரு பகுதியைச் சேர்ந்தவர் பழனியப்பன். BHEL ல் பணியாற்றி வருகிறார். இவரது மகன் அஸ்வின் பெருமாள் (11). அதே பகுதியை சேர்ந்தவர் ஹேமந்த் குமார். இவர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உறையூர் பகுதியில் வெடி கடை தற்போது போட்டுள்ளார். இவரது மகன் சஞ்சய் அங்கமுத்து.
இந்த நிலையில் இன்று மதியம் 2 மணி அளவில் தந்தையின் வெடி கடையை பார்ப்பதற்காக இருவரும் உறையூர் பகுதிக்கு வந்துள்ளனர். அப்படியே மத்திய பேருந்து நிலையம், கருமண்டபம் என பால்பண்ணை செக்போஸ்டை தாண்டி பெரிய வெடி கடை ஏதும் உள்ளதா என அப்படியே நடந்து சென்றுள்ளனர்.

இந்தநிலையில் வீட்டில் இரண்டு சிறுவர்களையும் காணாத தந்தை உறையூர் காவல் நிலையத்தில் சென்று புகார் செய்து உள்ளார். மேலும் வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் குழந்தைகளின் புகைப்படங்களை போட்டு பகிர்ந்துள்ளனர்.
தொடர்ந்து உறையூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சண்முகவேல் தலைமையில் போலீசார் அனைத்து இடங்களுக்கும் தகவல் கொடுத்து தீவிரமாக தேடி வந்துள்ளனர். மேலும் ஸ்பெஷல் டீம் ரோந்து வாகனம் மூலம் எஸ்.எஸ்.ஐ ரத்தனம், கணேசமூர்த்தி ஸ்பெஷல் டீம் போலீசார் ரவிச்சந்திரன் மற்றும் பாண்டியன் ஆகியோர் கொண்ட குழுவினர் பால்பண்ணை அருகே நடந்து சென்ற இரண்டு சிறுவர்களையும் மீட்டு உறையூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
இரண்டு மணி நேரத்தில் காணாமல் போன 2 குழந்தைகளையும் மீட்டு தந்தையிடம் ஒப்படைத்தனர். பெற்றோர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துச் சென்றனர்.