தேசிய சிந்தனைக் கழகத்தின் முப்பெரும் விழாவின் மாநில கமிட்டி ஆலோசனை கூட்டம்
தேசிய சிந்தனைக் கழகத்தின் சார்பில் நேதாஜி 125, பாரதியார் 100, சுதந்திரம் 75 என்ற முப்பெரும் விழாவின் மாநில கமிட்டி ஆலோசனை கூட்டம் திருச்சி ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வேலூர் விஐடி பல்கலைக்கழகத் துணைத் தலைவரும், முப்பெரும் விழா கமிட்டியின் தலைவருமான ஜி.வி.செல்வம் தலைமை தாங்கினார்.
தினமலர் உரிமையாளர்களில் ஒருவரும், கமிட்டியின் செயலருமான இரா.இலட்சுமிபதி வரவேற்புரையாற்றினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கோவை கற்பகம் பல்கலைக்கழக இணைவேந்தர் வ.கார்த்திக், சேலம் ஏவிஎஸ் கல்விக் குழுமங்களின் செயலாளர் கே.செந்தில்குமார், தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநில அமைப்பு செயலாளர் ம.கொ.சி.ராஜேந்திரன், கோவை தொழிலதிபர் ராஜேந்திரன், காங்கேயம் மருத்துவர் அ.ஆனந்த் விஷ்ணு, கன்னியாகுமரி கேப் கல்வி குழும செயலாளர் கார்த்திக், திருச்சி மருத்துவர் ஆர்.மாத்ருபூதம் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை கூறினர்.
இதில் நேதாஜி வரலாற்றின் குறும்படங்கள், கட்டுரைகள் மற்றும் போட்டிகள் நடத்துவதன் மூலமாக மாணவ, மாணவிகளுக்கு (குறிப்பாக) இன்றைய இளைய தலைமுறையினருக்கு வீரம், தன்னம்பிக்கை மற்றும் தேசிய உணர்வு வளர்க்க வேண்டிய அவசியத்தை அனைவரும் வலியுறுத்தினர். இறுதியில் ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியின் தலைமை செயல் அதிகாரியும், முப்பெரும் விழா கமிட்டியின் உறுப்பினருமான கு.சந்திரசேகரன் நன்றி கூறினார். முடிவில் கமிட்டி உறுப்பினர்கள் அனைவரும் மகாத்மா காந்தி உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.