யூனியன் சேர்மன் மீது கலெக்டர் அலுவலகத்தில் புகார்
திருச்சி மாவட்டம் தொட்டியம் யூனியன் துணைத்தலைவர் சத்யமூர்த்தி தலைமையில் தி.மு.க. கவுன்சிலர்கள் 5 பேர், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 5 பேர், தே.மு.தி.க. மற்றும் ம.தி.மு.க. கவுன்சிலர்கள் தலா ஒருவர் வீதம் திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கு கலெக்டர் அலுவலகத்தின் உதவி இயக்குனர் (பஞ்சாயத்து) அலுவலகத்தில் அதிகாரியை சந்தித்து புகார் மனு ஒன்று கொடுத்தனர்.
அந்த மனுவில், தொட்டியம் யூனியன் சேர்மனாக இருக்கும் தி.மு.க.வை சேர்ந்த புனிதராணி ஒருதலை பட்சமாக செயல்படுவதாகவும், தங்களிடம் எதுவும் கலந்து பேசுவதில்லை என்றும், இருக்கைகளை அவராக இஷ்டத்திற்கு மாற்றி உள்ளதாகவும், கொரோனா நிதி குறித்து சரியான தகவல் எங்களுக்கு தெரிவிப்பதில்லை என்றும், பாரபட்சமாக செயல்படும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.