மாடியில் இருந்து குதித்த இளம்பெண் சாவு
திருச்சி திருவானைக்காவல் அகிலா நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் ரங்கசாமி. இவர் அங்குள்ள வீட்டின் முதல் தளத்தில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். இவருக்கு 4 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். ரங்கசாமியின் 3-வது மகள் கிருஷ்ணவேணி (வயது 28). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. அதற்காக சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் வீட்டின் மொட்ட மாடிக்கு சென்ற கிருஷ்ணவேணி திடீரென மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். தகவல் அறிந்ததும் ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிருஷ்ணவேணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.