திருச்சி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற சம்பவங்களை குறைப்பது – சாலை விபத்துகளை தடுப்பது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் கடந்த சில மாதங்களில் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து இருந்து இருந்தார்.சைக்கிளிங் செய்வதில் மிகவும் ஆர்வம் கொண்ட எஸ்.பி சுஜித் குமார் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சைக்கிளில் சென்று ஆய்வு மேற்கொள்வது – கொல்லி மலை,துறையூர் போன்ற பகுதிகளில் திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் நடந்தே சென்று ஆய்வு மேற்கொள்வது போன்றவற்றில் ஈடுபட்டு வருகிறார்.இந்நிலையில் நேற்று, இரவு நேரங்களில் காவல்துறை அதிகாரிகள் எவ்வாறு செயல்பட்டு வருகின்றனர் என்பதனை கண்காணிப்பதற்காக திருச்சி ராம்ஜிநகர், இனாம்குளத்தூர், மணப்பாறை போன்ற இடங்களில் சுமார் 100 கிலோ மீட்டர் வரை சைக்கிளில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வின் போது இரவு நேர பணியில் இருந்த காவலர்களுக்கு குற்ற சம்பவங்களை தடுப்பதற்கு எந்த அளவிற்கு விழிப்புடன் இருக்க வேண்டும், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் விபத்துகளைத் தடுக்க எந்த அளவிற்கு கவனத்துடன் இருக்க வேண்டும் என்பது தொடர்பாக பல்வேறு அறிவுரைகளையும் வழங்கினார்.