ஆமூர், குணசீலம், ஏவூர் கிராமங்களில் திமுக வேட்பாளர் கதிரவன் பிரச்சாரம்
திருச்சி, ஏப்.6 மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் எம்எல்ஏ எஸ்.கதிரவன் முசிறி மேற்கு ஒன்றியம் பகுதிகளான குணசீலம், கல்லூர், வேப்பந்துறை, மணப்பாளையம், ஆமூர், ஏவூர், கோட்டூர், கருப்பம்பட்டி, காளிபாளையம், ஆசாரிபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டார்.
முன்னதாக குணசீலம் வந்த மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கதிரவனுக்கு மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
அப்போது அவர் பேசியதாவது, “10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் மிகவும் பின்தங்கி இருந்த குணசீலம், ஆமூர், ஏவூர் ஊராட்சிப் பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் தமிழக அரசின் அனைத்துத் துறைகளின் சார்பில் சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பில் வளர்ச்சித் திட்டப் பணிகள் செய்யப்பட்டுள்ளன.காவிரி ஆற்றின் கரையில் இருந்தாலும் விவசாயத்திற்கே தண்ணீர் பற்றாக்குறை இருந்த இப்பகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் மூழ்கிய குளங்கள் சீரமைக்கப்பட்டும், வாய்க்கால்கள், குட்டைகள், மற்றும் ஏரிகள் தூர்வாரப்பட்டும் விவசாயம் செழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர் மற்றும் சாலை வசதிகள் பல கோடி ரூபாய் மதிப்பில் செய்யப்பட்டுள்ளன.
கிராமப்புற மாணவர்களின் சிறப்பான கல்விக்காக துவக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்குப் பல கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டிடங்கள், சமையலறை மேலும் ஸ்மார்ட் வகுப்பறைகள், சுற்றுச்சுவர், கழிவறைகள், ஆகியன அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.
குண்டும் குழியுமான சாலைகளால் அவதிப்பட்ட மக்களுக்கு கடந்த 5 ஆண்டுகளில் தரமான சாலை வசதிகள் அமைத்துக் கொடுத்துள்ளேன். தரமான சாலைகள் இல்லாத கிராமங்களே இல்லை என்ற நிலையை உருவாக்கி உள்ளேன்.
தொகுதி மேம்பாட்டு நிதியிலும் அனைத்துத் துறை அமைச்சர்களின் மூலமாகவும் பல்வேறு திட்டப் பணிகள் செய்து கொடுத்துள்ளேன். மேலும் இப்பகுதியில் விண்ணப்பித்த அனைத்து மகளிர்க்கும் மகளிர் உரிமைத் தொகை கிடைப்பதற்கும் மாணவ மாணவிகளுக்கு புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் லேப்டாப் வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளேன்.
மேலும் எனது தொகுதி மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு முக்கியத்துவம் அளித்து நமது தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனையில் இலவச சிகிச்சை வழங்கி வருகிறேன். அதிநவீன மருத்துவ வசதிகளுடன் இயங்கி வரும் நமது மருத்துவமனையில் ஆமூர், குணசீலம், ஏவூர் ஆகிய மூன்று ஊராட்சிகளில் மட்டும் உள்நோயாளிகள், வெளி நோயாளிகள் என 12 ஆயிரத்து 775 பேர் பிரசவம், எலும்பு முறிவு, குடலிறக்கம், விபத்து சிகிச்சை மற்றும் ஆபத்தான தலைக்காயங்கள் உள்ளிட்ட பல அறுவை சிகிச்சைகள் மூலம் பயன் பெற்றுள்ளனர்.
இப்பகுதியில் விவசாயம் செழிக்கவும், மக்கள் அமைதியாக மற்றும் ஆரோக்கியமாக வாழவும், திமுக அரசின் நலத்திட்டங்கள் தொடரவும், உங்கள் வீட்டுப்பிள்ளையான எனக்கு நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் பெருவாரியாக வாக்களித்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன் என்று கதிரவன் பேசினார்.