காலிமனைகளில் தேங்கும் மழைநீரை 24 மணிநேரத்துக்குள் அகற்றாவிட்டால் அபராதம் விதிக்கப்படும்; மாநகராட்சி அதிரடி
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் திருச்சி மாநகராட்சி பகுதியில் மழைநீர் தேங்குவதால் ஆங்காங்கே டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த டெங்கு பாதிப்பு தற்போது அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. இதனை தொடர்ந்து மாநகராட்சி பகுதியில் டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மாநகராட்சி ஆணையர் முஜிபுர்ரகுமான் உத்தரவின்பேரில், நகர்நல அலுவலர் டாக்டர் யாழினி தலைமையில் மாநகராட்சி சுகாதாரபிரிவு அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இதன் ஒரு பகுதியாக மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தனியாருக்கு சொந்தமாக உள்ள காலிமனைகளில் மழைநீர் தேங்கி டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகி வருவதால் காலிமனைகளில் தேங்கியுள்ள மழைநீரை 24 மணிநேரத்துக்குள் அப்புறப்படுத்த வேண்டும் என்றும், எதிர்காலத்தில் மழைநீரை தேங்காமல் இருப்பதற்குரிய தக்க நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் பொது சுகாதார விதிகளின் கீழ் அபராதம் விதிக்கப்படும் என 37 மனைகளின் உரிமையாளருக்கு நோட்டீசு வினியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் மருந்து தெளித்து கொசுப்புழுக்கள் உருவாகாதபடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.