நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் விடுதலை சிறுத்தைகள் அதை வரவேற்போம்; தொல்.திருமாவளவன் பேட்டி
விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பாக சமூக நீதி சமூகங்களின் ஒற்றுமை எனும் கருத்தரங்கு திருச்சி கருமண்டபம் எஸ்.பி.எஸ். மஹாலில் நடைபெற்றது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனின் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற சமூகநீதிக் சமூகங்களின் ஒற்றுமை எனும் கருத்தரங்கில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இக்கருத்தரங்கில் வளர்பிறை என்னும் ஒலிப்பேழை குறுந்தகட்டை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அதனைப் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் எஸ்.டி.பி.ஐ. அப்துல் ஹமீது, காங்கிரஸ் பேரியக்கத்தின் திருச்சி வேலுசாமி, சி.பி.ஐ. கம்யூனிஸ்ட் இந்திரஜித், த.மு.மு.க. பொதுச் செயலாளர் ஜெ.ஹாஜாகனி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், நடந்து முடிந்த 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் களமிறங்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சி, மாவட்டக்குழு உறுப்பினருக்கென போட்டியிட்ட 4 தொகுதிகளில் 3 தொகுதிகளிலும், ஒன்றியக் குழு உறுப்பினருக்கென போட்டியிட்ட 43-ல் 27 ஒன்றியங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வெற்றி பெற்றுள்ளது. விடுதலை சிறுத்தை கட்சி அனைத்து தரப்பு மக்களில் நன்மதிப்பை பெற்று வலிமை பெற்று வருகிறது என்பதை இந்த தேர்தல் முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

சமூக நீதி சமூகங்களின் ஒற்றுமை குறித்து தமிழகம் முழுவதும் கருத்தரங்குளை விடுதலை சிறுத்தை கட்சி ஒருங்கினைத்து வருகிறது. பா.ஜனதா கட்சி மற்றும் அதனை பினிருந்து இயக்க கூடிய சன்பரிவார் அமைப்புகளும் சமூக நீதிக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் செய்து வருகின்றது. 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தலில் மீண்டும் பா.ஜ.க ஆட்சி அதிகாரத்தில் அமர்வதை தடுக்க இந்திய அளவில் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டிய தேவை இருக்கிறது. தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆனவக் கொலைகள் அதிகரித்து வருகிறது. தமிழக அரசு ஆனவக்கொலை தடுப்பு சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும்.
விஜய் மக்கள் இயக்கத்தினர் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பெற்ற வெற்றி விஜய்யின் அரசியல் வருகைக்கான ஒத்திகையாக பார்க்க முடியாது. நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் விடுதலை சிறுத்தைகள் அதை வரவேற்போம். அ.தி.மு.க. இந்த உள்ளாட்சி தேர்தலில் தோல்விக்கு காரணம் பா.ஜ.க.தான் காரணம். அ.தி.மு.க வில் தலைவர், பொதுசெயலாளர் உள்ளிட்டவர்களை கூட தேர்ந்தெடுக்க முடியவில்லை. பா.ஜ.காவை சார்ந்து இயங்கும் வரையில் அ.தி.மு.க விற்கு இந்த சரிவு தொடரும்.
சசிகலா மீண்டும் அரசியலுக்கு வந்தால் அதை நாம் விமர்சிக்க முடியாது. நீட் விவகாரம் தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் பிற மாநில முதல்-அமைச்சர்களுடன் ஆதரவை திரட்டுவது பாராட்டத்தக்கது. தமிழக சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு ஆளுநர், குடியரசுத் தலைவர் ஆகியோரிடம் கையெழுத்து பெற்று தர வேண்டியது பா.ஜ.க. அரசின் கடமை. இவ்வாறு அவர் கூறினார்.