சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசாருக்கு ஐ.ஜி பாராட்டு
திருச்சி துறையூர் போலீஸ்நிலையத்தில் பணியாற்றும் பெண் போலீசார் மகாலெட்சுமி, நீலாவதி மற்றும் போக்குவரத்து போலீஸ்காரர் கார்த்திக் ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு துறையூர் பஸ்நிலையத்தில் பெற்றோரை காணாமல் தவித்து கொண்டு இருந்த நாமக்கல் மாவட்டம் வரகூரை சேர்ந்த பெரியசாமி, பிரேமா தம்பதியரின் 3 வயது மகன் வெற்றிவேலை மீட்டு சிறுவன் குறித்த தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுவிலும் பகிர்ந்து சிறுவனின் பெற்றோரை உடனடியாக கண்டறிந்து தகவல் தெரியப்படுத்தினர்.

விசாரணையில் சமயபுரம் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று சாமிகும்பிட்டுவிட்டு திரும்பியபோது சிறுவனை தவற விட்டு சென்றது தெரியவந்தது. பின்னர் துறையூர் போலீஸ்நிலையத்துக்கு சிறுவனின் பெற்றோரை வரவழைத்து ஒப்படைத்தனர். சிறுவனை மீட்டு துரிதமாக பெற்றோரிடம் ஒப்படைத்த 3 போலீசாரையும் நேரில் வரவழைத்து மத்திய மண்டல ஐ.ஜி.பாலகிருஷ்ணன் வெகுமதி வழங்கி பாராட்டினார்.