ரயில் தண்டவாளத்தில் லாரி டயர் : 8 பேரிடம் விசாரணை
திருச்சி, ஜுன் 5 திருச்சி அருகே ரயில் தண்டவாளத்தில் லாரி டயர் வைத்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் 8 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2 ஆம் தேதி இரவு கன்னியாகுமரியில் இருந்து திருச்சி வழியாக சென்னைக்கு கன்னியாகுமரி விரைவு ரயில் சென்றது. நள்ளிரவு 1 மணி அளவில் வாளாடி ரயில் நிலையம் அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது சமூக விரோதிகள் யாரோ சிலர் ரயில் தண்டவாளங்களுக்கு இடையே டயரை போட்டுள்ளனர். இதைக் கண்ட ரயில் ஓட்டுநர் சாமர்த்தியமாக செயல்பட்டு உடனடியாக ரயிலின் வேகத்தை குறைத்தார். ஆனாலும் டயர் ரயில் என்ஜினில் மாட்டியதால் இன்ஜினின் மின் ஒயர் கேபிள்கள் துண்டாகி ரயில் நின்றது. இதுகுறித்து ரயில் ஓட்டுநர் கொடுத்த புகாரின் பேரில் விருத்தாச்சலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். விபத்து நடந்த பகுதியில் சுரங்கப்பாதை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக போராடி வரும் சூழலில் இந்த அசம்பாவித சம்பவம் நடைபெற்றுள்ளது. இச்சம்பவம் நடந்த இடத்தில் நேற்றுமுன் தினம் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் நேரில் சென்று விசாரணை செய்து இந்த சதி செயல் குறித்து விசாரிக்க டி.எஸ்.பி அஜய்தங்கம் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுரங்கப்பாதை எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் இதுபோன்ற செயலில் ஈடுபட்டார்களா? அல்லது தீவிரவாத அமைப்பினர் யாராவது ரயிலை தவிர்க்க சதி செய்தார்களா? என்பது போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வந்த நிலையில் நேற்று முன் தினம் அப்பகுதியை சேர்ந்த 3 பேரிடம் சந்தேகத்தின் பேரில் தனிப்படை காவல்துறையினர் விசாரணை செய்ததில் அந்த மூன்று பேரும் இந்த சதி செயலில் தொடர்பில் என தனிப்படை போலீசார் தெரிவித்திருந்தனர். இந்த டயர் யாருடைய என்பது விசாரணை செய்தபோது இந்த டயர் ரயில் பாதை அருகே வசிக்கும் கலையரசன் டயர் என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து தனிப்படை போலீசார் கலையரசனை விசாரணை செய்ததில் கலையரசனுக்கு சொந்தமான லாரி டயர் பழுதடைந்ததால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மாற்றி உள்ளார். அந்த டயரை அவர் வீட்டின் முன்பு வைத்துள்ளார். அதை வேற யாரோ சமூக விரோதிகள் தான் எடுத்து தண்டவாளம் நடுப்பகுதியில் வைத்துள்ளனர். சம்பவம் நடைபெற்ற 4 மணி நேரத்திற்கு முன்பில் இருந்து செல்போன் டவரை வைத்து யார் அந்த பகுதியில் வந்துள்ளார் என்பது குறித்து காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நிலையில் லால்குடி டிஎஸ்பி அஜய்தங்கம் தலைமையான தனிப்படை குழுவினர் செல்போன் டவர் சிக்னலை வைத்து விசாரணை செய்ததில் அதே பகுதியை சேர்ந்த 8 பேரின் செல்போன் எண்கள் பதிவாகியுள்ளதால் சந்தேகத்தின் பேரில் 8 பேரையும் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.