பள்ளி மாணவர் மீது கொடூர தாக்குதல் நடத்திய நபர் கைது…
மணப்பாறை அருகே அரசுப்பள்ளியில் மாணவனை மது போதையில் தாக்கிய மற்றொரு மாணவியின் தந்தையை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே கூடத்திப்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று மாலை நேர கல்வி வகுப்பு நடந்தபோது தனது மகளை அழைத்துச்செல்ல வந்த ஒரு மாணவியின் தந்தையான வின்சென்ட் ராஜ் என்பவரிடம் அதே பள்ளியில் பயின்று வரும் 8 வயது சிறுவன் மாணவியின் பெயரைக் கூறி நீங்கள் அவரது அப்பாவா என்று கேட்டுள்ளார். மது போதையில் இருந்த வின்சென்ட் ராஜ் பாடம் கற்றுக்கொண்டிருந்த மாணவனை என்னிடமே கேள்வி கேட்கிறாயா என கோபமாக கேட்டு சிறுவனை அடித்தும் தகாத வார்த்தையால் திட்டி காலால் எட்டி உதைத்துள்ளார். அப்போது ஆசிரியை தடுத்தும் அதனை கேளாமல் சிறுவனை கொடூரமாக தாக்கியுள்ளார். சிறுவன் தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இந்நிலையில் சிறுவனின் தந்தை அருளப்பன் என்பவர் வையம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் வின்சென்ட் ராஜை கைது செய்தனர். சிறுவன் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.